இன்ஸ்டாகிராம் மூலம் வந்த லிங்க்.. கிளிக் செய்தால் கொட்டும் பணம்.. ₹32 லட்சத்தை சுருட்டிய கும்பல்!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2024, 11:26 am
கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு, அதில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்து Bain என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார்.
பின்னர் தனது வங்கி விவரங்களை பதிவு செய்து ரூ. 9 லட்சத்து 8 ஆயிரத்து 100/- ரூபாயை முதலீடு செய்து உள்ளார்.
செயலியில் 32 லட்சம் ரூபாய் காட்டிய நிலையில் அந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது மேலும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி உள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்ட உணர்ந்த ராமசாமி, இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண், கிஷன் சௌத்ரி, சுனில் சரண் மற்றும் சந்தீப் குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த நான்கு பேரும் பல்வேறு வங்கிகளில் 11 வங்கிக் கணக்குகளை வைத்து இருந்து, ராமசாமியின் பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளது தெரியவந்து உள்ளது.
இவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 59 ஆயிரத்து 650/- ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த கும்பலின் வங்கி கணக்கில் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக பண பரிமாற்றம் நடந்து உள்ளது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.