அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை..! அச்சம் அடைந்த பயணிகள்…

Author: kavin kumar
21 February 2022, 8:21 pm

கோவை மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் , காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பில்லூர் வனச்சாலையின் வழியே மஞ்சூர் செல்லும் வழியில் வாகனங்களை மறித்து கடந்த சில மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று உலா வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு இன்று அரசு பேருந்து ஒன்று சென்றது.

அந்த பேருந்து நீராடி என்ற மலை கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பேருந்தை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது. மேலும் பேருந்தினை நோக்கி யானை முன்னேறி வந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனே பேருந்தினை நிறுத்தி பின் நோக்கி இயக்கினார்.

இருப்பினும் யானை அங்கிருந்து நகராமல் சாலையின் நடுவே நின்று கொண்டு அங்கும் இங்குமாக யானை அங்கேயே உலாவி கொண்டு இருந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் இருந்த போதிலும் பேருந்தே அமைதியாக காணபட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து ஒரு வழியாக காட்டுயானை அங்கிருந்து அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து புறபட்டது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!