பிரபல தொழிலதிபரை தாக்க லாரிகளில் வந்த கூலிப்படை : இடத்தகராறால் அரங்கேறிய பயங்கரம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. கும்பலுக்கு போலீசார் வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 1:38 pm

கோவை கணபதி அலுமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் கணபதி ராமகிருஷ்ணாபுரத்தில் மோட்டார் பம்ப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அதே பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கார்த்திகேயனுக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது. இதே போல பாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் உள்ள பலரிடமும் தகராறு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பல முறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14 மாதத்திற்கு முன்பு பாலகிருஷ்ணன் செல்வபுரத்தை சேர்ந்த பாட்டில் மூடி வியாபாரம் செய்யும் ராமசந்திரன் என்பவரை கார்த்திகேயனுக்கு சொந்தமான இடத்தில் கம்பெனி வைக்க முயற்சித்த போது தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 2 மணியளவில் பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் இரண்டு லாரிகளில் சுமார் 75 பேரை கூட்டி வந்து கார்த்திகேயனின் குடோன் பூட்டை உடைத்து லாரிகளில் இருந்த ராமசந்திரனின் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

இதை அறிந்த கார்த்திகேயன் அங்கு சென்றார். இதுகுறித்து அவர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியபோது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில்
பாலகிருஷ்ணனும் ராமசந்திரனும் அங்கே கீழே இருந்த இரும்பு ராடுகளை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் கார்த்திகேயனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியது. மேலும் அந்த கும்பல் கார்த்திகேயனை ஓட ஓட விரட்டி தாக்க துவங்கினர். அங்கிருந்து விளாங்குறிச்சி சாலைக்கு ரத்த காயங்களுடன் அலறியபடி வந்த கார்த்திகேயனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த கும்பல் தாங்கள் வந்திருந்த லாரி மற்றும் பொருட்களை விட்டு விட்டு தப்பி சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த கார்த்திகேயன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் , ராமசந்திரன் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கார்த்திகேயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குள் நடைபெற்று வரும் மோதல் மற்றும் அடிதடி சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப் படாமல் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…