போலீஸ் அலட்சியமே கொடூர தாக்குதலுக்கு காரணம் : செய்தியாளரை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 4:32 pm

காவல்துறையின் அலட்சியமே கொடூர தாக்குதலுக்கு காரணம் : செய்தியாளரை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவை பார்த்து அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் எல் முருகன், பல்லடம் பகுதியில் செய்தியாளர் மிக கொடுமையாக கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் மீது காவல்துறை, அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் காவல் துறையிடம் உதவி கேட்டும் உதவி மறுக்கப்பட்டு இருக்கிறது, உரிய நேரத்தில் காவல் துறை உதவி செய்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும், காவல்துறையின் மெத்தனப் போக்கு, அந்த காவல்துறையின் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மத்திய இணை அமைச்சர், தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஊடகத்தில் உள்ள நபருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது எனவும் இன்றைக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்பது இந்த சம்பவம் காட்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் பல்லடம் பகுதியில் 3 மாதத்துக்கு முன்னால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இதேபோன்று சரமாரியாக வெட்டினார்கள், தோட்டத்தில் ஏன் மது அருந்துகிறார்கள் என கேட்டதற்காக நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதே பகுதியில் தான் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.

ஊடகத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள், நியாயமான செய்தியை தைரியத்தோடு கொடுக்கின்ற செய்தியாளர்களுக்கு நியாயம் இல்லை, பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது எனவும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கு இருக்கிறதா? என்பது இன்றைக்கு தெரியவில்லை என தெரிவித்த எல்.முருகன் அயோத்தியில் ராமர் கோயில் நிகழ்ச்சி எங்கேயாவது ஒளிபரப்பவார்களா? அல்லது பிஜேபி கொடியேற்றுகிறாளா? இதை பார்க்கும் வேலையை தான் காவல்துறையினர் பார்க்கிறார்கள், இந்த சமூக விரோதிகள், கூலிப்படையினர் போல தாக்குதல் நடத்துபவர்களை கண்காணிப்பதில்லை என குற்றம் குற்றம் சாட்டினார்.

காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும், காவல் துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். செய்தியாளர் நேச பிரபு எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது நாம் நேரடியாக பார்க்க முடிகிறது, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தவர், தமிழக காவல்துறை மிக கடுமையாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் நேற்றைக்கு உதவி செய்திருக்கலாம் ஆனால் செய்தியாளர் பெட்ரோல் பங்குக்குள் நுழைந்து கதவை சாத்திய பிறகும் கூட தாக்கி இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர் போராடி இருக்கிறார் என்பது தெரிகிறது.

வீட்டுக்குள் சென்றால் வீட்டில் இருப்பவர்களை வெட்டுவார்கள் என்ற சூழ்நிலை இருந்தது, அவர் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு இருப்பார்கள் எனவும் செய்தியாளர் சமயோகிதமாக செயல்பட்டதன் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

அவ்வாறு வெளியேறியும் கூட காவல்துறையுடன் தொடர்பில் இருந்தும் கூட காவல் நிலையத்துக்கும் சம்பவம் அடைந்த இடத்திற்கும் 500 மீட்டர் தான் தொலைவு, இருந்தும்கூட காவல்துறையிடம் எந்த அளவுக்கு ஒரு மெத்தனப் போக்கு இருந்திருக்கிறது என குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் நேச பிரபு சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் பார்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் டாஸ்மார்க் கடைகள் தொடர்பாக செய்தியாக வெளியிட்டு இருக்கிறார் எனவும் அதனால் தான் அவர் தாக்கப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்த எல் முருகன், காவல்துறைக்கு தான் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது, இதில் எவ்வித பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு குழு கையில் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தாமதமாக முதல் தகவல் அறிக்கை போட்டு இருக்கிறார்கள் காவல்துறையிடம் உதவி கேட்டும் பாதுகாப்பு தரவில்லை அவரைக் காப்பாற்றுவதற்கு எந்த விதமான எத்தனைப்பும் இல்லை, செய்தியாளர் மீது அக்கறை இல்லாதைதாதான் இது காட்டுகிறது.

தாக்கபட்ட செய்தியாளருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்திருக்கிறது, 15 யூனிட் வரையிலும் ரத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மருத்துவமனை சார்பில் செய்தியாளருக்கு முழுமையான சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது , செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு தொகையை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?