சிவன் கோவிலில் கிடந்த இறைச்சி துண்டு.. பொங்கி எழுந்த மக்கள்.. கடைசியில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2025, 5:49 pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தப்பாச்சிபுத்ராவில் அனுமான் கோவிலுடன் கூடிய சிவன் கோயில் ஒன்று உள்ளது.
அந்த கோயில் சிவலிங்கத்தை சுற்றி நேற்று புதன்கிழமை அன்று காலை இறைச்சி துண்டுகள் கிடந்தன.
இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள்,பக்தர்கள் ஆகியோர் இது மத துவேஷம் காரணமாக திட்டம் போட்டு யாரோ செய்த சதி என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக ஆறு தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.
போலீசார் அளித்த வாக்குறுதி அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது வெளியில் இருந்து இறைச்சி துண்டுகளை தூக்கி வந்த பூனை ஒன்று அதை சிவலிங்கம் அருகில் வைத்து சாப்பிட்ட பின் மீதியை அங்கு விட்டு சென்றது தெரியவந்தது
பூனையின் இந்த செயல் கண்ணப்ப நாயனார் கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.