மளிகை கடையில் பொருள் வாங்குவது போல 5 சவரன் செயினை பறித்த இளைஞர்.. ஷாக் சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2024, 12:08 pm
கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இவரது மளிகை கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இது சம்மந்தமாக தனலட்சுமி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து குற்றவாளியை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மேலும் மளிகை கடையில் தனலட்சுமி தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை குற்றவாளி அறுத்து சென்ற காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனிடையே அன்னூர் அருகே குன்னத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த கோவையை பிலிப் மேத்யூ (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அதில் அவர் தனலட்சுமியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார்.
மேலும் படிக்க: நான் நல்லா இருக்கேன்…திரும்பி வருவேன் : சந்தேகமே வேண்டாம்.. வீடியோ வெளியிட்ட வைகோ!
இதையடுத்து இவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.