ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தேர்த் திருவிழா : வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்,அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 11:35 am

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம் .
வருவாய்த்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்கள், மாவட்ட நீதிபதி மற்றும்
மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். 12 ஆழ்வார்களில். பெரியாழ்வாரும், ஆண்டாளும் என 2 ஆழ்வார்கள் பிறந்த புண்ணியபூமி ஸ்ரீவில்லிபுத்தூராகும்.

இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. இங்குள்ள ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த திரு நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் தடை காரணமாக தேரோட்டத் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது.

இத்திருவிழாவில் தினமும் காலை ஆண்டாள் ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா என திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப்பொருட்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 9.05 மணிக்கு தேரோட்டத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். ஆர். ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருது நாகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ,மாவட்ட நீதிபதி, மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோாவிந்தா… கோபாலா ‘ என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். தேர் ஆடி அசைந்து மக்கள் கடலில் நீந்திவந்த காட்சி பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது. தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 1500 க்கும் மேற்ப்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆடிவரும் தேரோட்டத்தைக்கான தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக மருத்துவம் ,குடிநீர், அன்னதானம், பேருந்து வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் இருக்க 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் முக்கியமான பல இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா என் படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்க- சுதா கொங்கரா மனசுல இப்படி ஒரு சோகமா?