பேரூராட்சிமன்ற தேர்தலில் வென்ற கணவனை அலேக்காக தூக்கிய மனைவி… ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு
Author: Babu Lakshmanan5 March 2022, 2:08 pm
தேனி : பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார்.
தேனியின் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 7 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், அமமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், தலைவர் பதவிக்கு திமுக – அமமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில், அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுகவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்.
ஆனால், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், திமுக கவுன்சிலர் ஒருவரும், அதிமுகவைச் சேர்ந்த இரு கவுன்சிலர்களும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவளித்தனர். இதனால், அமமுக கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவியை கைப்பற்ற உதவிய திமுக கவுன்சிலர் மணிமாறன் என்பவருக்கு துணைத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
இந்த நிலையில், பேரூராட்சியின் துணைத் தலைவராக வெற்றி பெற்று வீடு திரும்பிய மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார். பின்னர், ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.