’விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான்’.. முடிச்சு போட்ட திருமா!
Author: Hariharasudhan1 February 2025, 9:58 am
விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவும் இதனை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில், அதன் தலைவர் விஜய் முன்னிலையில், ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து, அவருக்கு தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளராக தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து. விசிக தலைவர் திருமாவளவனைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை ஆதவ், திருமாவுக்கு வழங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ, அதைப் பகையாக கருதுகிற பாரம்பரியம் தான் இங்கே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூனா, கட்சியைவிட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போதும்கூட அதை பகையாகக் கருதவில்லை.
வலிகள் இருந்தாலும் அதனை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றாலும், உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது, தமிழக அரசியலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தவெக உள்ளது.
இதையும் படிங்க: பேத்தி மாதிரி… 4 வயது குழந்தைக்கு… விவசாயி செய்த கொடூரம் : அதிரடி தண்டனை!
விசிக பேசும் அதே கொள்கைகளைத்தான் தவெகவும் பேசுகிறது. எங்களுக்குள் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “பெரியார் மற்றும் அம்பேத்கருடைய கொள்கைகளை திருமாவளவனிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்.
இந்த பயணத்தில் எந்த முடிவெடுத்தாலும் என் ஆசானிடம் கலந்துரையாடி என் பயணத்தை தொடங்குவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்தச் சந்திப்பு. நாங்கள் எதிரெதிர் துருவம் அல்ல, தவெக தலைவர் விஜய்க்கும் சரி, விசிக தலைவர் திருமாவளவனுக்கும் சரி, ஒரே கொள்கை தான்” என்றார்.