மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை.. திருமா பரபரப்பு கருத்து!
Author: Hariharasudhan6 February 2025, 3:25 pm
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை என்றால், அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது என திருமாவளவன் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை: இது தொடர்பாக கூட்டம் ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், “என் கடைசி மூச்சு இருக்கும் வரை சனாதனத்தை எதிர்த்த நபர் என்றால், அது புரட்சியாளர் அம்பேத்கர் தான். பெரியாரைவிட ஒரு படி மேலே போனால், புரட்சியாளர் அம்பேத்கர்தான். நீ இந்த மதத்தில் இருப்பதால் தானே இப்படிச் செய்கிறாய் என்று மதம் மாறுகிறேன் என அவர் கூறினார்.
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை என்றால், அங்கே உள்ள மக்களும் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது. சிலரிடம் நான் அவசரப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனால், வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அவர்களுக்கு மதம் மாறுவதைத் தவிர வேறு வழியே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது, மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவு வாங்கும் மேம்பாலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விபத்து : வாகன ஓட்டிகள் திக்..திக்!
முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.