என்னுடைய முதல் பணியே இதுதான் : கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றார் பிரதாப் அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 5:12 pm

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரதாப் நியமிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

முன்னாள் ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அவரது பொறுப்பை புதிய ஆணையாளர் பிரதாப்பிடம் ஒப்படைத்ததையடுத்து பொறுப்பு ஏற்பு கோப்பில் கையெழுத்திட்டு கோவை மாநகராட்சியின் ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையாளர் பிரதாப், கோவை தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நகரம் எனவும் கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மேலும் கோவை மாநகராட்சி பழமையான மாநகராட்சி என்றும் பிரசித்தி பெற்ற மாநகராட்சி என்றும் தெரிவித்தார். இங்கு நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர், மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், மேயர் ஆகியோர் வழிக்காட்டுதலின் படி அடிப்படை வசதிகளை கண்டறிந்து அதனை தீர்க்கும் பணிகளை முதலில் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் மாநகராட்சியில் குறைதீர்க்கூட்டம் நடைபெறவில்லை என சிலர் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அதனை மேயருடன் கலந்துரையாடி பிரதிவாரம் மேயர் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனக்கு இது புதிய மாவட்டம் என்பதால் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும் சில விஷயங்களை சிறப்பாக செய்துள்ளார் எனவும் அதனையும் தொடர்ந்து கடைப்பிடித்து அதில் மேன்மை படுத்த வேண்டியதையும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அரசு அலுவலர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!