குலசேகரன்பட்டினத்தில் களைகட்டியது தரசா பண்டிகை… காளி வேடம் அணிந்து தத்ரூபமாக ஊர்வலம் வந்த பக்தர்கள்…!!
Author: Babu Lakshmanan19 October 2023, 9:52 am
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, தத்ரூபமாக பல்வேறு காளி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம் வந்தது அனைவரிடத்திலும் பரவசத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினம் “அருள்மிகு” முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டுதோறும் காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் இன்று மாலை தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது.
ருத்ர தர்ம சேவா நிறுவனரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான தா.வசந்தகுமார் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஸ்பா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
வேடமணிந்த தசரா குழுவினர் மேள, தாளங்கள் முழங்க இந்த காளி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அட்டை காளி, பத்திரகாளி, கருங்காலி, சுடுகாட்டு காளி மற்றும் பறவை காவடி, 21 அக்னி சட்டி ஆகிய பல்வேறு விதமான வேடமணிந்த காளிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று சென்றனர்.
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலமானது, வி.வி.டி சிக்னல், அண்ணா பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சிக்னல், உள்ளிட்ட வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது.
பின்பு, சிறப்பாக காளி வேடமணிந்திருந்த பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.