தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியரை கடத்திய கந்துவட்டி கும்பல் ; ரூ.1.20 லட்சம் கேட்டு மிரட்டல் ; 2 பேர் கைது
Author: Babu Lakshmanan29 November 2023, 2:04 pm
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியரை கந்து வட்டி கேட்டு காரில் கடத்தி தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (59). அனல் மின் நிலைய ஊழியரான இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முத்தையாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (43) என்பவர் மூலம் பிரதீப் (30) என்பவரிடம் ரூபாய் 2,10,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரம் வரை வட்டி செலுத்தி உள்ளாராம். இந்நிலையில் கேம்ப்-2 பகுதி பஸ் நிறுத்தத்தில் லிங்கதுரை நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு காரில் வந்த பிரதீப், சக்திவேல் இரண்டு பேரும் சேர்ந்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் புதுக்கோட்டை அருகில் காரிலிருந்து இறக்கி விட்டார்களாம்.
இதுகுறித்து தெர்மல் நகர் போலீசில் லிங்கதுரை புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிவு செய்து பிரதீப், சக்திவேல் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.