திருமண வரன்களை தடை செய்பவர்களே : இளைஞர்கள் வைத்த போஸ்டரால் புது வில்லங்கம்… ரகசிய விசாரணையை தொடங்கிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2022, 12:50 pm
கன்னியாகுமரி : கருங்கல் அருகே மாப்பிள்ளை தேடி வரும் பெண் வீட்டார்களிடம் புறம் பேசி தடை செய்யப்பட்டு வரும் நிலையில் “திருமண வரன்களை தடை செய்பவர்கள் ” என அடையாளம் தெரியாத இளைஞர்களின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும் பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சில ஆசாமிகள் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இதனால் இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தற்போது கருங்கல் அடுத்த பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டில் உள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்க போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு பயணிகள் நிழல் குடை, குட்டி சுவர் என வரன்களை கொடுக்கும் ஆசாமிகள் அச்சப்படும் அளவுக்கு ஒட்டியுள்ளனர்,
அதில் “திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு” தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும் குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வில்லங்க போஸ்டர் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில் கருங்கல் போலீசாரும் இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், மனக்குமுறல்களை வெளிப்படுத்தி போஸ்டர் அடித்த இளைஞர்களும் புறம் பேசி வரன்களை கெடுக்கும் ஆசாமிகளும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.