கணவர் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. திருப்பூரில் பரபரப்புச் சம்பவம்!
Author: Hariharasudhan19 February 2025, 9:53 am
திருப்பூரில், கணவர் கண்ணெதிரே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மூன்று பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருப்பூரில் கடந்த சில நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், தற்போது வேலை இல்லாத நிலையில், மீண்டும் ஊருக்கேச் செல்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகத் தெரிகிறது.
அப்போது, பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். தொடர்ந்து, இளம்பெண்ணின் நிலையை அறிந்த அவர்கள், தங்களுக்குத் தெரிந்த பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், அங்கு வந்தால் நல்ல ஊதியம் கிடைக்கும், குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கலாம் என்றும், உணவு, தங்கும் இடம் என அனைத்தும் இலவசமாக தரப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண் தனது குடும்பத்துடன் அந்த நிறுவனத்தை நோக்கிச் சென்றுள்ளார். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மூன்று இளைஞர்களும், கத்தி முனையில் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கின்றனர்.
அப்போது, அதனைத் தட்டிக் கேட்ட கணவரையும் தாக்கி உள்ளனர். தொடர்ந்து, கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: கதை எழுதாத பிரதீப்.. ஸ்ட்ரிட்டாகச் சொன்ன சார்.. யார் தெரியுமா?
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவர் மற்றும் குழந்தையோடு சென்று, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நதீம், டேனிஷ் மற்றும் முர்ஷித் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.