பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்த கார்.. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் ; திருவள்ளூரில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan9 August 2023, 8:25 am
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாள் வெட்டி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் சுந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு இளையராஜா (24) என்ற இளைய மகன் இருந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் திருப்பாச்சூரில் இருந்து திருவள்ளூர் செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, திருப்பாச்சூர் ரைஸ் மில் அருகே சென்றபோது, இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் இளையராஜாவை வழிமறித்து அரிவாளால் தலையில் வெட்டியது. இதில், இளையராஜா அங்கிருந்து ரத்தம் சொட்ட சொட்ட தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அரிவாள் வெட்டால் படுகாயம் அடைந்த இளையராஜாவை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை வழிமறித்து தலையில் வெட்டிய காரில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்று வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.