ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள்.. ‘யாரோ இருவர்’? சேலம் வழக்கில் திடீர் திருப்பம்!
Author: Hariharasudhan19 February 2025, 11:56 am
சேலத்தில், குழந்தைகளை தந்தையேக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், யாரோ இருவர் வெட்டிவிட்டுச் சென்றதாக தந்தை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார் – தவமணி (38) தம்பதி. இந்தத் தம்பதிக்கு வித்ய தாரணி (13), அருள் பிரகாஷ் (5) மற்றும் அருள்குமாரி (10) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.19) காலை அசோக்குமார் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மேலும், குழந்தைகள் மூவரும் ரத்தக் காயங்களுடன் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், குழந்தைகள் அருள் பிரகாஷ் மற்றும் வித்ய தாரணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பலத்த ரத்தக் காயங்களுடன் கிடந்த தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்ட உறவினர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார், வழக்குப் பதிவு செய்து கணவர் அசோக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் கணவரே மனைவி, குழந்தைகளை வெட்டியதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: கணவர் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. திருப்பூரில் பரபரப்புச் சம்பவம்!
இந்த நிலையில், மாவட்ட எஸ்பி கெளதம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, யாரோ இருவர் வந்து தனது குடும்பத்தினரை வெட்டிவிட்டுச் சென்றதாக குழந்தைகளின் தந்தை அளித்த தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.