சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!
Author: Hariharasudhan17 December 2024, 2:13 pm
நாமக்கல்லில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தலை நசுங்கி கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதிக்கு உட்பட்ட காதர் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.17) இவர்கள் குடியிருக்கும் பகுதி அருகே உள்ள சாலையின் இருபுறங்களிலும், தலை நசுங்கிய நிலையில் இருவரது சடலங்கள் கிடந்து உள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மில் நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிதைந்து கிடந்த இருவரது சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் முன்னா மற்றும் துகாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, அவர்களது உறவினர்களுக்கு போலீசார் தகவல் அளித்து உள்ளனர்.
இதையும் படிங்க: லாரியில் நானும் செல்வேன்.. நெல்லையில் மருத்துவக் கழிவுகள்.. அண்ணாமலை கடும் எச்சரிக்கை!
மேலும் இது தொடர்பான விசாரணையில், உயிரிழந்த இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாகவும், நேற்று இரவு மதுபோதையில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.