தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து வன்முறை ; தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்… ; திருமாவளவன் பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 2:39 pm

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அருகே கே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ஆம் கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த 16 வயது மாணவர் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, தனது ஊருக்கு சென்றார்.

அவர் ஊரில் இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் எங்களை சமாதானப்படுத்த நீ யார்..? எனக்கூறி தாக்கியது. இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயது மாணவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளரிடம் கூறியதாவது:- கோவில்பட்டி அருகே கழுகுமலை பள்ளி மாணவர் ஹரிபிரசாத் வீட்டுக்கு வந்து தாக்கியதாக 6 பேர் பெயர் குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட ராஜ குருவை தவிர மற்றவர்கள் யாரும் பள்ளி மாணவர்கள் கிடையாது.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஹரி பிரசாத்துக்கு நரம்பியல் நிபுணர் கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஹரி பிரசாத் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட கூடிய மனப்பாங்கு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்ற நோக்குடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹரிபிரசாத் மீது செய்யப்பட்ட வழக்கு மறுபரிசீலனை செய்து தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு மதவெறி அரசியலை விதைப்பதை ஜனநாயக கட்சிகள் சுட்டிக்காட்டி கண்டித்து வருகின்றன. சாதி உணர்வுகளை பரப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்.

நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையம் நாங்குநேரி பிரச்சனையோடு நின்று விடாமல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிலவும் சாதியை வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்து வேண்டும். தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!