எடப்பாடி பழனிசாமியுடன் பாமக பிரமுகர் திடீர் சந்திப்பு.. இதுதான் காரணமா?
Author: Hariharasudhan21 February 2025, 10:58 am
எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளாரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் அவரது மகன் தமிழ் குமரன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, ஜி.கே.மணி தனது உறவினர் இல்லத் திருமண விழா அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், இபிஎஸ் உடன் ஜி.கே.மணி தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசுவதாகவும் இருகட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
அன்புமணியின் ராஜ்யசபா பதவி: காரணம், வருகிற ஜூன் மாதத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்துப் பேசி உள்ளது அரசியல் மேடையில் கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கும் சூழலில், அதில், நான்கு இடங்கள் திமுகவிற்கும், ஒரு இடம் அதிமுகவிற்கும் கிடைப்பது உறுதி. ஆனால், மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்து பெற முடியும் என்ற சூழல் உள்ளது.
முன்னதாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகள் அங்கம் வகித்தன. இந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்தபோது, பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது.
இதையும் படிங்க: சொன்னபடி செய்த அண்ணாமலை.. திமுக ஐடி விங்கைத் தேடும் பாஜகவினர்!
ஆனால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், வட மாவட்டங்களில் திமுக அதிக இடங்களைப் பிடிக்காத வகையில் செய்வதற்கு அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்கலாம் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தச் சந்திப்பின் மூலம் மீண்டும் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமானால், தற்போது அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் நிலை சற்று கேள்விக்குறியாக உள்ளதாக தகவல்கள் கூறினாலும், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி என்பது தேர்தல் ஒப்பந்தமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.