தூக்கம் தொலைத்த செந்தில் பாலாஜி.. மூத்த அமைச்சர் வழியில் டெல்லி விசிட்.. பரபரக்கும் களம்!
Author: Hariharasudhan19 March 2025, 11:24 am
டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டு உள்ள நிலையில், நேற்று மாலை டெல்லி சென்று இன்று அதிகாலையே சென்னை திரும்பியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசர் மாளிகையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது விநியோகம் செய்யும் மது ஆலைகளின் தலைமை அலுவலகங்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, மது கொள்முதல் மற்றும் விற்பனையில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும், இந்த முறைகேட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது டெல்லி சென்று திரும்பி இருக்கிறார். இதற்காக நேற்று மாலை டெல்லி புறப்பட்ட அவர், இன்று அதிகாலையே டெல்லி சென்று திரும்பியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதோடு, அமலாக்கத்துறை குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்திற்குச் சொந்தமான இடங்கள் மற்றும் கல்லூரிகளில் கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனையடுத்து, அன்றைய நாளின் இரவே, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடன் சேர்ந்து துரைமுருகன் டெல்லி சென்று திரும்பினார். இந்த நிலையில் தான், தற்போது அதே பாணியில் இரவோடு இரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.