செந்தில் பாலாஜியால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்.. எம்பியும் சேர்ந்ததால் சோதனை!
Author: Hariharasudhan6 March 2025, 3:43 pm
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்கள் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், இன்று அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கரூர், ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீடு, கரூர் பழனியப்பா நகரில் உள்ள ஆல்பின் டவர்ஸ் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் கரூர் – ஈரோடு சாலையில் உள்ள கோதை நகர் பகுதியில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து வந்துள்ள 20 அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட மூன்று குழுக்கள், இன்று காலை 9 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மூன்று பேரும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
முன்னதாக, கடந்த 2011 – 2016ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனையடுத்து, அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. சமீபத்தில்தான், செந்தில் பாலாஜிக்கு அவசரமாக அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடப்பதால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!
மேலும், சென்னை, பாண்டிபஜார் பகுதியில் உள்ள அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார் டிஸ்டிலரிஸ் என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்என்ஜே என்ற மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது.