அம்மஞ்சல்லி பைசா கூட வரல… தமிழ்நாடு மீது மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் : கொந்தளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 8:42 pm
அம்மஞ்சல்லி பைசா கூட வரல… தமிழ்நாடு மீது மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் : கொந்தளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழகத்தில் இரண்டு பேரிடர்கள் ஏற்பட்டது டிசம்பர் தொடக்கத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகவும், அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு மத்திய அரசு சார்பில் குழுக்கள் ஆய்வு செய்து இருந்தன. மாநில அரசு சார்பில் 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட்டது.
இந்த நிவாரண தொகை குறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு தகவல்களை கூறினார். அதில், மிக்ஜாம் புயல் பேரடர் நிவாரண நிதியாக 19,650 கோடி ரூபாயும், தென் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை நிவாரண பணிக்காக 18,214 கோடியும் பேரிடர் நிவாரண நிதியாக அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.
ஆனால், ஆண்டுதோறும் பேரிடர் வருகிறதோ வரவில்லையோ மாநில அரசுக்கு மத்திய அரசு தவறால் தர வேண்டிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கடந்த வருட இரண்டாவது தவணைத் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, பேரிடர் நிவாரண நிதி அளித்து விட்டோம் என கூறிக் கொள்கிறார்கள். மத்திய அரசு சார்பாக பல்வேறு அதிகாரிகள் இங்கு வந்தார்கள். பாதிப்பை கணக்கிட்டார்கள். ஆனால், தற்போது வரையில் ஒரு அம்மஞ்சல்லி பைசா கூட மத்திய அரசு அதன் மூலம் தரவில்லை.
2023 குஜராத் வெள்ளத்திற்கு 338 கோடி ரூபாய், அசாம் 2022 வெள்ளத்திற்கு 250 கோடி ரூபாய், கர்நாடகாவில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு 939 கோடி ரூபாய், குஜராத்தில் 2021ல் ஏற்பட்ட புயலுக்கு ஆயிரம் கோடி ரூபாய், மத்திய பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்புக்கு 600 கோடி ரூபாய், பீகாரில் 2021 ஆம் ஏற்பட்ட பேரிடருக்கு 1038 கோடி ரூபாய், கர்நாடகாவில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு 1621 கோடி ரூபாய் என வெள்ள நிவாரண நிதிகளை வாரி வழங்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பாரபட்சம் காட்டுகிறது.?
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி தமிழக அரசு வழங்கியது. இதற்காக 1,486 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அடுத்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க 30.94 லட்சம் குடும்பத்திற்கு தலா 6000 மற்றும் 1000 ரூபாய் நிவாரண நிதியை வழங்கியது இதற்காக 540 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
வீடுகள் சரி செய்ய, வீடு கட்டுவதற்கு 385 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பயிர் சேதத்திற்கு 250 கோடி ரூபாய், நெடுஞ்சாலை துறைக்கு 775 கோடி ரூபாய், மீன்பிடி படகுகளை சரி செய்ய 15 கோடி ரூபாய் என வெள்ள நிவாரணபணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தியது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று கூறினார்.