3வது திருமணம் செய்ய ஆசை.. முன்னாள் காதலனை வைத்து 2வது கணவர் கொலை!
Author: Hariharasudhan11 March 2025, 1:30 pm
கர்நாடகாவைச் சேர்ந்த 2வது கணவரை வேளாங்கண்ணியில் வைத்து முன்னாள் காதலனை வைத்து கொலை செய்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (22). இவரது காதலி எலன்மேரி. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். பின்னர், மாதா கோவில் பின்புறம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும், மறுநாளே வேளாங்கண்ணி மாதா கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனையடுத்து, வேளாங்கண்ணி போலீசார் ஜனார்த்தனன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஓரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது, அங்கு அழுது கொண்டிருந்த எலன்மேரியிடம், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சுப்ரியா விசாரணை நடத்தியுள்ளார். அதற்கு, தனது கணவரின் நண்பர்களே அவரைக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் நடத்திய விசாரணையில், தனது கணவரின் நண்பர்கள் ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் எங்கள் அறையில் தங்கினார்கள், அவர்கள்தான் எனது கணவரைக் கொன்று விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

அதோடு, “எனது கணவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர்கள், என்னிடம் வந்து உனது கணவர் ஜனார்த்தனனை ரயில்வே ஸ்டேஷன் அருகே கொலை செய்து போட்டு விட்டோம்’ எனத் தெரிவித்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.
ஆனால்,எலன்மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருக்கு தெரியாமலேயே அவரைப் பற்றி விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே, ஜனார்த்தனனைக் கொலை செய்துவிட்டு பெங்களூர் தப்ப முயன்ற ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜீவாவும், எலன் மேரியும் ஒரே கல்லூரியில் படித்த நிலையில், இருவரும் காதலித்துள்ளனர். இதனிடையே, ஜனார்த்தனனையும் எலன்மேரி காதலித்து திருமணமும் செய்து உள்ளார்.
இதையும் படிங்க: அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!
ஆனால், ஜனார்த்தனனுடன் வாழப் பிடிக்காமல் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு, அதற்காக தனது முன்னாள் காதலன் ஜீவா மற்றும் அவரது நண்பரை வரவழைத்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, எலன்மேரி மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளாங்கண்ணி போலீசார், எலன் மேரியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, எலன் மேரிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தர்மபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இரண்டாவதாக ஜனார்த்தனனை திருமணம் செய்து கொண்ட எலன்மேரி, அவரையும் பிடிக்காமல் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள ஜனார்த்தனனைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
