‘போ.. போ.. ஓரமாப் போ’… பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானை ; வைரலாகி வரும் வீடியோ!!
Author: Babu Lakshmanan11 April 2023, 2:07 pm
கோவை ; கோவை – ஆனைகட்டி செல்லும் சாலையில் பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம் எனவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல சமயங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்துள்ளன.
இந்நிலையில், இன்று காலை ஆனைகட்டி சாலை தூமனூர் பிரிவு அருகே ஒற்றைக்காட்டு யானை ஒன்று மலைப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளது. அச்சமயத்தில் பேருந்து ஒன்று வழியாக வந்ததை கண்ட அந்த யானை பேருந்துக்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளது. இதனை பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதேசமயம் அனைத்து யானைகளும் வாகனங்களுக்கு வழி விடாது எனவும், சில சமயங்களில் வாகனங்களை துரத்த கூடும் என்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.