கோவை : மாநில கல்விக்கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், அதை முனைப்புடன் செயல்படுத்துவோம் எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி கல்லூரியில் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய வானதி, புதிய கல்வி கொள்கையினை திறந்த மனுதுடன் மாநில அரசு அணுக வேண்டும் என வலியுறுத்தினார். செயல் வழி கற்றல் முறை இருந்தாலும் அதை மேம்படுத்த புதிய கல்வி கொள்கை உதவும் என தெரிவித்த அவர், புதிய கல்வி கொள்கையில் எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன எனவும் கொள்கைகள் தாண்டி அதில் இருக்கும் நல்ல விசயங்கள் நமது மாநிலத்திற்கும் கிடைக்க வேண்டும் என எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சமீபகாலமாக சில பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் இதனை தவிர்க்க, மாணவர்களுக்கு சைக்காலஜி மற்றும் வாழ்வியல் கல்வி கொடுக்க முயன்று வருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
மாவட்ட மற்றும் தலைமை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும் எனவும் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குழந்தைகளை அடிக்க வேண்டாம் எனவும் ஆனால் கண்டிப்பு காட்ட வேண்டும் எனவும் கூறிய அவர், இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக விழிப்புணர்வு மட்டும் போதாது எனவும் செயல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேர்வு காலம் துவங்கிவிட்ட நிலையில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு சிறு தயக்கம் இருக்கும் என்பதால் அதனை தீர்க்க ஆசிரியர்கள் முயல வேண்டும் எனவும் நூலகத்தை அதிகம் பயன்படுத்த மாணவர்களை பழக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய அவர் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அசம்பாவிதங்களை தவிர்க்க சில பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்காக பள்ளிகளை திறக்காமல் இருக்க கூடாது எனவும் தற்காலிக கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தாவது பள்ளி வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் அவர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
சுமார் 6 லட்சம் குழந்தைகள் அரசுப்பள்ளிகளை நம்பி வந்துள்ளதாகவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அடிப்படை கல்வியை அறிந்திருக்கிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எதிர்கட்சி எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் தங்கள் பகுதிக்கு கல்வித்துறைக்கு தேவையான வசதிகள் குறித்து மனுக்கள் அளித்து, அவ்வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போது மண்டல அளவில் களநிலவரம் குறித்தும் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது எனவும், ஒவ்வொரு மண்டலத்திலும் அங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சொல்லும் கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறோம் என தெரிவித்தார்.
இது போன்ற ஆலோசனைகள் துறைக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அவர், 11 மாதத்தில் பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 12,300 பள்ளி கட்டிடங்கள் பாழடைத்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என தெரிவித்த அவர், அதை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாநாட்டில் மாற்றத்தை பள்ளியில் இருந்து துவங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் சொல்லப்பட்டது என தெரிவித்த அவர், இரு வருடங்ளாக மாணவர்களுக்கு கற்றல் இல்லாமல் போனதால், அவர்களின் செயல்பாடுகள் மாறுகின்றது எனவும் தெரிவித்தார்.
மாணவர்களிடம் நிறைய தவறுகள் வராமல் தடுத்து இருக்கின்றோம், இனி மேல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் இருக்கின்றது என தெரிவித்த அவர், வரம்பு மீறிய மாணவர்கள் இடைநீக்கம் என்பது, வேறு மாணவர்கள் தவறு செய்யக்கூடாது என்பதற்காதான் என தெரிவித்தார்.
மாணவர்கள் வரம்பு மீறும் போது அதை கண்டித்தால்தான் பிற மாணவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என தெரிவித்த அவர், சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை என்பது எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் கருத்து எனவும், தமிழக அரசை பொறுத்த வரை மாநில கல்வி கொள்கைதான் நிலைப்பாடு எனவும், இதை செயல்படுத்துவதில் எங்கள் முனைப்பை காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வரும் முடிவுகளுக்கு பள்ளி கல்வித்துறை கட்டுப்படுவோம் எனவும் தெரிவித்தார். இரு மொழி கொள்கைதான் எங்கள் நிலைப்பாடு என தெரிவித்த அவர், ஆங்கில லேப் அமைக்க 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கல்வித்துறை அரசியல் பார்க்ககூடாத துறை, அதிமுக கொண்டு வந்தது என்பதற்காக கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார்.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தைரியமாக மகிழ்ச்சியாக தேர்வு எழுத வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.