20 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடியை காதல் திருமணம் செய்த பெண் போலீஸ்.. ஒரே நொடியில் விபரீத முடிவு!
Author: Hariharasudhan24 March 2025, 2:55 pm
சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை: சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செல்வி (39). புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த மார்ச் 21ஆம் தேதி பணிநிமித்தமாக நீதிமன்றத்துக்குச் சென்றவர் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சக போலீசார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து, அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீசார் சென்றுள்ளனர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. அப்போது, பலமாக தட்டியும் கதவு திறக்கவில்லை எனத் தெரிகிறது.
பின்னர், இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புளியந்தோப்பு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செல்வி தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, அவரது உறவினரான நல்லுசாமி (41) என்பவரை 2004ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர் 2008ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பத்தூரில் பணியாற்றிய பின்பு சென்னைக்கு வந்துள்ளார் செல்வி.
ஆனால், அவரது கணவர் நல்லுசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. மேலும், ஏ பிளஸ் ரவுடிப் பட்டியலிலும் இருந்துள்ளார். எனவே, அடிக்கடி அவரைத் தேடி வெவ்வேறு மாவட்ட போலீசார் வந்துள்ளனர். அதோடு, அவ்வப்போது அவர் கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் வந்துள்ளார்.
இதையும் படிங்க: பாமகவுக்கு ஒரு ரூல்ஸ்.. திமுகவுக்கு ஒரு ரூல்ஸ்? மாணவர்கள் மீது திமுக துண்டை போட்டு ஆடிய கவுன்சிலர்!(வீடியோ)
இதனால் மனவேதனை அடைந்த செல்வி, தனது கணவரை வீட்டுக்குள் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். இதனை அறிந்த மதுரை போலீசார், வாரண்ட் தொடர்பாக நல்லுசாமியை கடந்த ஜனவரயில் கைது செய்துள்ளனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், சிவகங்கையிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையில் நல்லுசாமிக்கு தொடர்பிருக்கலாம் என அம்மாவட்ட போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவரத்தைக் கேட்டு செல்வியும் நல்லுசாமியும் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் செல்வி தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.