கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை.. சென்னையில் பகீர் சம்பவம்!
Author: Hariharasudhan5 February 2025, 2:06 pm
சென்னையில், வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை, அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில், வீடுகளில் வேலை பார்த்து வருபவர் தனம் (45). இவரது அக்கா மகள் செல்வி. இவருக்கு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, மூன்று வருடங்களாக செல்வியும், காளிமுத்துவும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணமும் செய்துள்ளனர். ஆனால், திருமணம் நடந்த அடுத்த சில நாட்களில், காளிமுத்து, தனது மனைவி செல்வியை சந்தேகப்பட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செல்வி, கணவரைப் பிரிந்து, தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, இருவரையும் சேர்த்து வைப்பதற்காக காளிமுத்துவின் உறவினர்கள் சமரசம் பேச முயற்சித்துள்ளனர். ஆனால், செல்வி கணவனுடன் வாழ முற்றிலும் மறுத்துள்ளார். இதனிடையே, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த காளிமுத்து, தனது வேலையை விட்டுவிட்டு கடந்த மூன்று மாதங்களாக, சென்னை திருவொற்றியூர் பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தன்னுடன் வாழாத மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட காளிமுத்து, அவரது வீட்டருகே முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வீட்டை நோட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை அதேபோன்று வீட்டு வாசலில் நின்று நோட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் ‘சர்கார்’ பட சம்பவம்… பெண்ணின் வாக்கை செலுத்தியது யார்?
அப்போது, வாசலில் கோலம் போட வந்த செல்வியின் சித்தி தனம், காளிமுத்துவை கோபமாகத் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனால், தனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார், தனத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்தில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.