பொண்ணுங்க ஒன்னும் சலச்சவங்க இல்ல.. தைரியமாக வெளியில் வாங்க .. வானதி சீனிவாசன் அட்வைஸ்..!

Author: Vignesh
2 செப்டம்பர் 2024, 10:13 காலை
Quick Share

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்தாரம் செய்யப்பட்டது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.


இது தொழில்நுட்ப யுகம், எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் தூய்மை பணியாளரில் இருந்து உயர் அதிகாரிகள் வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது? பெண்கள் எவ்வளவுதான் படித்து அறிவில் சிறந்து விளங்கினாலும், உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு, அவர்கள் போகப் பொருளாகவே தெரிகின்றனர்.

பெண்ணை தாயாக, சகோதரியாக, மகளாக பார்க்க தோன்றுவதில்லை. அதனால்தான் ஜே.இ.இ. போன்ற கடினமான தேர்வில் வென்று திருச்சி என்.ஐ.டி.யில் படித்த வந்த மாணவிக்கு, கேபிள் வயர் பொருத்த வந்த ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் பெண்கள் முதல் படித்து உயர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் வரை அனைவரும் கல்வி நிலையங்கள், வேலை செய்யும் இடங்கள் என எங்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.


மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக நடிகைகள் ஊடகங்களில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது.பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர்கள் யாரும் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைதான் இனி, அதுபோல வேறொருவர் செய்யாமல் தடுக்கும். நிறுவனங்களும், அரசும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 146

    0

    0