இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1,021 பயிற்சி மருத்துவர்களுக்கு பணி ஆணை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2024, 9:23 pm
இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1,021 பயிற்சி மருத்துவர்களுக்கு பணி ஆணை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் முதல் முறையாக மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தொல்ல விளை பகுதியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதனை அடுத்து நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கான சிறப்பு விழா போன்றவற்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில், 1021 பயிற்சி முடித்த டாக்டர்களுக்கு நாளை காலை 10 மணி அளவில் பணி ஆணை வழங்கப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்தில் இன்னும் 15 தினங்களில் 983 மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த பின்னர் 1266 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்தில் 2240 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்காசி உட்பட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க தமிழக முதல்வர் மத்திய அரசு கூறியுள்ளார் விரைவில் அந்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
பேட்டியின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்