ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
Author: Hariharasudhan29 March 2025, 2:24 pm
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழ நம்பிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் – காளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகன், மகளுடன் பரமக்குடியில் வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது, காளியம்மாளின் 17 வயது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்று இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பெண் வீட்டார் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், அப்பெண்ணின் தாய் காளியம்மாளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து சந்தோஷ் பிரச்னை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் காளியம்மாள், தனது 17 வயது மகளை கீழநம்பி புரத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பிற்பகல், இளம்பெண்ணை சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவரும் தன்னிடம் பேச வேண்டும் என்று தூத்துக்குடிக்கே வந்து வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது உடலில் தீ வைத்துள்ளனர். தீக்காயங்களுடன் அலறிய அந்தப் பெண்ணை உடனடியாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!
பின்னர், பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தாய் காளியம்மாள் கண்ணீர் மல்க கூறுகையில், “எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது அரசு, காவல்துறை உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பெண்ணிற்கும் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.