இளைஞரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்குதல்… கலவரமான பார்… சிசிடிவி காட்சிகளை வைத்து இருவர் கைது!!
Author: Babu Lakshmanan25 May 2024, 4:05 pm
கொடைரோடு அருகே பள்ளபட்டியில் மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடுட்டை அடுத்த, பள்ளபட்டி அருகே கவுண்டன்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த அருண் (24) என்பவர் பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மேலும் படிக்க: காருண்யா பல்கலை.,யை மேம்படுத்தும் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் ; CONSTRONICS INFRA LIMITEDக்கு ஒதுக்கீடு!
இந்நிலையில், நேற்று முன்தினம் அருண் சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கொடைரோடு அருகேவுள்ள ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்குமார், பள்ளபட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி மற்றும் தீபக் ஆகிய மூவரும் மதுபோதையில் அருணுடன் வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, வாய்த் தகராறு முற்றி இருதரப்பினருக்கிடையே மோதல் ஈடுபட்டதாகவும், அதில் மனோஜ்குமார் தரப்பு அருணை பீர் பாட்டிலால் தாக்கி, சராமாரியாக அடித்ததில் படுகாயம் அடைந்த அருண் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவுத்தாய் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமார், மருதுபாண்டி ஆகிய இருவரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், தீபக் என்பவரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.