தீவிரமடையும் கனமழை… 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…!!
Author: Babu Lakshmanan1 November 2022, 8:47 am
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், 4-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.