மகளிர் தினத்தன்று மாஸ்… த.வெ.க.வின் அடுத்த அதிரடி ; கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக வீடியோ வெளியிட்ட விஜய்..!!
Author: Babu Lakshmanan8 March 2024, 6:22 pm
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கொள்கையை பின்பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். மேலும், தனது கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்த அவர்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலே தங்களின் இலக்கு என்றும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் தமிழ் வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படும் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய், முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கொள்கையை பின்பற்றி எங்கள் கட்சியில் உறுப்பினராக இணையலாம் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கிய எனது பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனமயாகப் பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம்!, எனக் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் சி. விஜயலட்சுமி, கடலூரைச் சேர்ந்த மாநில இணைச் செயலாளர் யாஸ்மின், கோவையைச் சேர்ந்த மாநிலப் பொருளாளர் சம்பத்குமார், மதுரையைச் சேர்ந்த விஜய் அன்பன் கல்லணை, சென்னையைச் சேர்ந்த மாநில துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், உறுப்பினராக சேர்பவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதிமொழியையும் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. அதாவது, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழக மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தீயாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, எனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.