ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனம்… அதிமுக எம்எல்ஏ உள்பட 20 பேர் மீது பொய் வழக்குப்பதிவு ; திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்…!!

கோவை மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ் நாட்டில் தற்போது நடப்பது மக்களாட்சியா? அல்லது கொடுங்கோலன் ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவிக்கும் நிலை, பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது. தமிழகமே தங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதுபோல், பல்வேறு அடாவடித்தனங்களில் தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து ஒருசில கொத்தடிமை அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளாகவே நடந்துகொள்வது கேவலத்தின் உச்சம்.

கழக அமைப்புச் செயலாளரும், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான A.K. செல்வராஜ், கடந்த 23.1.2024 அன்று மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக உரிய முன் அனுமதி பெற்று, மேட்டுப்பாளையம் நகராட்சிக் கவுன்சிலர்கள் தனசேகரன், சுனில்குமார், விஜயலட்சுமி, முத்துசாமி, மருதாசலம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து, மேட்டுப்பாளையம் நகர மன்ற வார்டு எண். 30, சாந்தி நகரில் கான்கிரீட் சாலை அமைக்க மதிப்பீடு வழங்கக் கோரி பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் நகராட்சி நிர்வாகம் மதிப்பீடு வழங்காததால், அப்பகுதி மக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும், எனவே உடனடியாக கான்கிரீட் சாலை அமைப்பதற்கான மதிப்பீட்டினை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தனது உறுப்பினர் நிதியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் மேற்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளரிடம் கோரி இருக்கிறார். A.K. செல்வராஜ் நகராட்சி ஆணையருடன் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, மேட்டுப்பாளையம் திமுக நகர மன்றத் தலைவர், துணைத் தலைவர், திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையர் அறையில் வேண்டுமென்றே நுழைந்து, எப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற வார்டு உறுப்பினர்களுடன் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கலந்துரையாடலாம் என்று தேவையில்லாமல் பிரச்சனை செய்துள்ளனர்.

ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனத்தின் உச்சமாக மக்கள் நலப் பணிகளை துவக்கக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் பேரிலும், அவருடன் சென்ற நகராட்சிக் கவுன்சிலர்கள், நகரச் செயலாளர், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர்கள் மீதும், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட சுமார் 30 நகராட்சி அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கி பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொய் வழக்கில் குற்ற எண். 51/2024-ன்கீழ், பெண்களை தொந்தரவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விடியா திமுக மோசடி அரசின் ஏவல் துறையாக விளங்கும் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை முடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பார்.

இதுவே, திமுக முதல்-அமைச்சர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாரிகளுக்கும், பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுக்கும் மரியாதை அனைவரும் அறிந்ததே. அதுவும் ஒருசில அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் அதிகாரிகளிடம் நடந்து கொண்ட பல நிகழ்வுகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

பொதுவெளியில் பெண் காவலரிடம் வரம்புமீறி நடந்துகொண்ட விருகம்பாக்கம் திமுக நிர்வாகி மீது இதுவரை காவல்துறை FIR-க்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணப்பாறை மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள், JCB இயந்திரங்களை அமைச்சர் பெயரைச் சொல்லி காவலர்களிடமிருந்து அடாவடியாக மீட்டுச் சென்ற திமுக பிரமுகர், திருச்சியில் காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றின் மீதெல்லாம் காவல் துறையினரின் நடவடிக்கை ஏதும் இல்லை. இதுதான் திமுக-வினர் பெண் காவலர்களுக்குத் தரும் மரியாதை. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த இராதாகிருஷ்ணனிடம் நேரடியாக பணம் கேட்ட திமுக நிர்வாகியின் உரையாடல் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியை மருத்துவப் படிப்பில் சேர்க்கிறேன் என்று கூறி, வீட்டு வேலை வாங்கியும், தீயால் சுட்டும், கத்தியால் வெட்டியும் சித்ரவதை செய்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகளை தப்பிக்க விட்டுவிட்டு, பல தனிப்படைகள் அமைத்து தேடிக்கொண்டிருக்கிறது விடியா திமுக அரசின் காவல் துறை. இவ்வாறு பெண்களுக்கு திமுக-வினரால் இழைக்கப்படும் கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதே நேரம், நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை, ஆளும் திமுக-வினரின் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல. இந்த ஆட்சியாளர்களால் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்கும் திறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

“நான் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்”, என்று அடிக்கடி கூறும் முதல்-அமைச்சருக்கு, அவருடைய தந்தையின் குறளோவியத்தில் நினைவுபடுத்துகிறேன். ஒன்றை “நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.” (குறள் 553) விளக்கம்: நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறை செய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான். நம் தாய் நாடாம் தமிழ் நாட்டை இனியும் விடியா திமுக ஆட்சியாளர்கள் கெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்.

அதிகாரம் நிரந்தரமானது என்ற நினைப்புடன் திமுக-வினரின் சொல்படி செயல்படக்கூடிய ஒருசில அரசு அதிகாரிகள் மற்றும் ஒருசில காவல் துறையினர், சட்டப்படி இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே விடியா தி.மு.க. அரசு ஆட்சியில் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு நியாயமாக, சட்டத்தின்பால் நேர்மையாக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிடில், அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த, மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.K. செல்வராஜ் மற்றும் நகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 பேர் மீது பொய் புகார் கொடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி ஊழியர்களைக் கண்டித்தும், அப்புகாரை தீர விசாரிக்காமல் உடனடியாக பொய் வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினரைக் கண்டித்தும், கழகத்தின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…

31 minutes ago

Get out பதாகை.. பிரமாண்ட விருந்து.. புதிய அறிவிப்புகள்.. தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவின் Highlights!

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…

1 hour ago

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…

2 hours ago

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

15 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

16 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

16 hours ago

This website uses cookies.