இபிஎஸ் பக்கம் திரும்பிய ம.செ.க்கள்… அதிமுகவில் உறுதியான ஒற்றைத் தலைமை ..? அரியணை ஏறும் இபிஎஸ்… திகைப்பில் ஓபிஎஸ் …!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 1:45 pm

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து குரல் வலுத்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் குவிந்து வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற குரல் ஒலித்து வருகிறது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, கடந்த 5 தினங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இப்படியிருக்கையில், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை இறுதி செய்வது குறித்து இறுதிகட்ட ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்து வருகிறது. ஒற்றைத் தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுமா..? என்பது இந்தக் கூட்டத்தில் தெரிய வந்துவிடும்.
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸும் கலந்து கொண்டுள்ளார். இபிஎஸ் இதுவரையில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை தன்னை சந்திக்குமாறு அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதிமுகவில் 75 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில், அவரின் அழைப்பை ஏற்று, தேனி, விருதுநகர் உள்பட 9 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், தங்கமணி, பி.வி. ரமணா, செல்லூர் ராஜு, எஸ்பி வேலுமணி என 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

EPS - Updatenews360

இதன்மூலம், 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், ஒருவேளை ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதிமுகவின் தலைமையாக எடப்பாடி பழனிசாமியின் முடிசூட்டப்படுவார் என்றே தெரிகிறது.

தனக்கு ஆதரவு குறைந்து வருவதால் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், தற்போதைய சூழலை பார்க்கையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அவர் ஏறறே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகி வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!