எம்ஜிஆர் மாதிரி அண்ணாமலையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் : சூர்யா சிவா கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 9:31 pm

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் ஏதேனும் அதிமுக , திமுக என்ற இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் தேசியக் கட்சிகள் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது .

ஆனால் இப்படியே கூட்டணி வைத்துக்கொண்டு போனால் பாஜக தனித்து வளர முடியாது. தனித்துப் போட்டியிட்டால் தான் பாஜகவின் செல்வாக்கு வளரும். ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறார் அண்ணாமலை .

அது சரிப்பட்டு வராது என்று கட்சியின் சீனியர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கிறதே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விடுவேன்.
கூட்டணி வைத்து சமரசம் செய்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்காக நிறைய தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்க்கட்டும். நான் ஒரு தொண்டனாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அவரது கட்சியின் சீனியர்கள் யாரும் ஒத்துப் போகவில்லை. அண்ணாமலை எடுத்த எடுக்க முடிவு தவறானது என்று அவர்கள் அனைவரும் சொல்லி வருகின்றனர். ஆனால் திருச்சி சூர்யா சிவா மாதிரியான அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலையின் முடிவு சரியானது என்கிறார்கள்.

அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே போனால் அவர் பின்னால் யாரும் போக மாட்டார்கள் அமர் பிரசாத் ரெட்டி, சூர்யா சிவா, செல்வகுமார், கிருஷ்ணகுமார் உட்பட யாரும் அவர் பின்னால் போகமாட்டார்கள் என்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

ஆனால் அண்ணாமலை கூட யாரும் போகாவிட்டாலும் கூட அவர் வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்கிறார் சூர்யா சிவா.

அதற்கு அவர் சொல்லும் உதாரணம், தனித்து நின்றால் தான் பலம் தெரியும். கூட்டணியில் இருந்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

அதே அவர் தனித்து நின்றிருந்தால் முதலமைச்சராகி இருப்பார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஜானகி அம்மாள் -ஜெயலலிதா என்று இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்த போது ஜெயலலிதா பக்கம் யாருமே போகவில்லை. ஆனால் அவர்தான் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தார்.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகிச் சென்ற போது எம்ஜிஆர் பின்னால் யாரும் செல்லவில்லை. என்னைக் கூட அழைத்தார் நான் போகவில்லை என்று துரைமுருகன் சொல்லுகிறார் .

வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது கூட அவர் பின்னால் கூட திமுகவில் இருந்து நிறைய பேர் சென்றார்கள். ஆனால், எம்ஜிஆர் பின்னால் திமுகவிலிருந்து யாரும் செல்லவில்லை.

ஆனால் அவர் ஜெயிக்கவில்லையா? மக்கள் ஆதரவு தான் முக்கியம். மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயிக்கலாம். அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது . நிச்சயம் அவர் வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார் என்கிறார் சூர்யா சிவா.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!