அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்னை விஸ்வரூபம்: பதவியை பறிக்க தயாராகும் முதல்வர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 அக்டோபர் 2024, 7:52 மணி
rajakannappan
Quick Share

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.

தாவி, தாவி அமைச்சர் ஆனவர், அரசு நிலத்தை ஆட்டைய போட்டவர், அரசு நிலத்தை அபகரித்தவர் பற்றிய விவரங்களை வெளியிடுவதாக அறப்போர் இயக்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, தமிழக அரசியல் களத்தில் மட்டும் அல்லாது, எதிர்க்கட்சிகள் முகாமிலும் திடீர் பரபரப்பு பற்றிக் கொண்டது.

இந்நிலையில் அந்த அமைச்சரின் பெயர் அவர் அபகரித்த நிலம் பற்றிய முழு விவரங்களையும் அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்பன். தமது மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை(சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் இந்த நிலம் உள்ளது. இந்த நிலத்தை
அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்துள்ளார். அந்த நிலத்தை தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறி முழு ஆதாரங்கள், ஆவணங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகாராக அனுப்பி இருக்கிறது. அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் இந்த புகாரை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர், துணை முதல்வர் தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்த படி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலை. இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்கள் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 2015ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் ஆகும். இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள், இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது.

இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும் படி கேட்டுள்ளார். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்துள்ளனர் .

பிறகு சுதந்திரம் அடைந்ததும் .இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.
சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைக்கப்பட்டுள்ளன.கடந்த 1990களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.
முக்கியமாக 2015ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

இதற்கு பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்ய வில்லை. இந்த கடிதத்திற்கு பிறகும் கூட 2018ல் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள்.

கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.

அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன் படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.

அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது. ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார் என்று தெரிகிறது.

இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் போன்றோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டு உள்ளது.

மேலும், தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் தாம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக கிட்டத்தட்ட 101 பக்கங்கள் கொண்ட நில அபகரிப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அறப்போர் இயக்கம் இணைத்துள்ளது.
இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் காதுக்கு எட்டி உள்ளது. இதனால் கோபம் அடைந்த முதல்வர் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை அளித்து விவரம் கேட்டுள்ளார். இதனால் அமைச்சரின் பதவிக்கு ஆபத்து காத்திருக்கிறது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அமைச்சரவை மாறும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர், அவரது மகன்கள் மீது அறிவித்தபடி ஊழல் முறைகேடு, நில அபகரிப்பு புகார்கள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. இதனால் கண்ணப்பன் ஒருநாள் காலையில் கண்ணை விழிக்கும் போது பதவி பறிபோகும் இல்லை ஏற்பட்டுள்ளது.
ராஜ கண்ணப்பன் தி.மு.க.,வில் தற்போது இருக்கிறார்.

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறையின் அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2000ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி, 2001ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டது. 2006ல் கண்ணப்பன் கட்சியை கலைத்து விட்டு தி.மு.க.,வில் இணைந்தார். 2006ல் தி.மு.க., சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.2009ல் தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சில காலத்துக்கு பிறகு மீண்டும் தி.மு.க.,வில் இணைந்தவர், இப்போது அமைச்சராக இருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களை, பத்திரிகைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் எனக்கூறியுள்ளார்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தமிழக வரலாற்றிலேயே ஊழலில் சிக்கிய அமைச்சர் பெருமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எப்போதுமே இது மாதிரி அதிகமாக இருந்ததில்லை. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டு புளங்காகிதம் அடைகின்றார் ஸ்டாலின்.

நில்லு கண்ணப்ப… நில்லு கண்ணப்ப… என் அன்புடை தோன்றலே நில்லு கண்ணப்ப என்று கண்ணப்ப நாயனாரை சிவபெருமான் அழைத்ததாக நாயன்மார்கள் வரலாறு கூறுகிறது. அந்த கண்ணப்பன் தன் கண்ணையே சிவபெருமானுக்கு கொடுத்தார். இந்த கண்ணப்பன் தன் கண்ணான மகன்களுக்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் கண்ணப்பன் ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஒரு போக்குவரத்து அதிகாரியிடம் உனது ஜாதி என்று கேட்டு மிரட்டியதாக புகார்கள் எழுந்தது.

கண்ணப்பன் என்றாலே தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளன. இதனால் கண்ணப்பன் மீது உடனே நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் திட்டங்களுக்கு தான் வெள்ளை அறிக்கை கேட்பார்கள். தற்போது திமுக உள்ள அமைச்சர்கள் மீது என்னென்ன ஊழல் புகார்கள் உள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் அளவுக்கு சென்று விட்டது.

வெள்ளையறிக்கை மூலம், இந்தந்த அமைச்சர்கள் மீது இவ்வளவு ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ளது, இவர்கள் மீது கோர்ட் நடவடிக்கைகள் என்ன நிலையில் உள்ளது. விசாரணையில் இருக்கும் அமைச்சர்களை பதவி விலக சொல்லி விசாரணை நேர்மையாக நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஊருக்கு ஒரு நியாயம், தனது கட்சிக்கு ஒரு நியாயமா. பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு முகம்.. பதவிக்கு வந்தபிறகு இன்னோர் முகம் என்று காட்டுவது சரியல்ல. இதனால் முதல்வர் கண்ணப்பனின் பதவி மீது குறி வைத்துள்ளதாக திமுகவினரே ஆருடம் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இனி ஊழல் அமைச்சரவையின் முதல்வர் என்று ஸ்டாலின் பெருமையாக சொல்லிக்கொள்ளும் நிலை ஏற்படும் என திமுக தொண்டர்களே அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.

இந்தியாவிலேயே தமிழக அமைச்சரவையில் மட்டும்தான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவையாக இருக்கிறது. முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தனது கட்சியின் மூத்த அமைச்சர்களிடம் அவர் விவாதித்து வருவதாக தெரிகிறது.
ஊழலில் உச்சம் தொட்டுகொண்டுள்ள அமைச்சர்களை வைத்துக்கொண்டு தன்னை நல்லாட்சி நாயகன் என்று சொல்லிக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் தவிக்கிறார்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றுதான் எல்லா அமைச்சர்களின் போக்கு இருக்கிறது. சுரண்டியது வரைக்கும் ஆதாயம் என்று உள்ளனர்.

ஒரு அரசியல்வாதி கட்சிக்கு பலகோடி நிதி எப்படி தர முடிகிறது எங்கிருந்து வருகிறது.
அதை தாண்டி லாபம் எடுக்க, எப்படி எல்லாம் செயல்படுவார். தேர்தலுக்கு முன்னர் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. பதவி முடியும்போது அவரது சொத்து மதிப்பு எவ்வளவு. இதையெல்லாம் கண்டுபிடித்து தெரிந்தாலே போதும். அவரது தகுதி தெரியும். மக்கள் ஒன்று கட்சியை பார்க்கின்றனர். இல்லாவிட்டால் தலைவன் அல்லது இலவசம் ,குவார்ட்டர் ,ரூபாய் சலுகைக்கு மயங்கி வாக்களிக்கின்றனர்.

இந்த நிலை மாறும் வரை தமிழகத்தில் அமைச்சர்கள் நிலையும் மாறப்போவதில்லை. லஞ்சம் தவிர் ..நெஞ்சம் நிமிர் என்று கூறும் அளவுக்கு முதல்வர் நடவடிக்கை இருக்குமா. இல்லை ஊழல் அமைச்சர்களுக்கு சம்காரம் வீசும் சம்பிரதாயம் நடக்குமா என்பது விடியல் அரசுக்கு தான் வெளிச்சமாக இருக்கப் போகிறது. 2026 தேர்தலில் திமுகவுக்கு அமைச்சர்களால் சாதனையை விட சோதனைகள் தான் அதிகம் எட்டிப் பார்க்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கைத்தட்டி கூறுகின்றனர்.

  • 10th SSLC Exam 10ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தால் பாஸ்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
  • Views: - 19

    0

    0

    மறுமொழி இடவும்