இந்திக்காரர்கள் மட்டும்தான் நாட்டின் குடிமக்களா? இது இந்திய நாடா? இந்தியின் நாடா? கொந்தளித்த சீமான்!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2022, 6:12 pm
மத்திய அரசு ஹிந்தி மொழியை போட்டித் தேர்வுகளில் கட்டாய மொழியாக்குவதாக குற்றம் சாட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் ஹிந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டும் எனவும், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் ஹிந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் என கொடுக்கப்பட்டிருக்கும் பார்லி குழுவின் பரிந்துரைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் பேராபத்து.
இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரி செலுத்துகிறார்களா? அவர்கள் மட்டும்தான் விடுதலைக்கு பங்களிப்பு செலுத்தினார்களா? இந்திக்காரர்கள் மட்டும்தான் நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்?
அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனை திணிக்க முற்படும் மத்திய அரசின் செயல் மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலை. இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.