2024 தேர்தலை சனாதன தேர்தலாக சந்திக்க தயாரா..? தேர்தல் வந்தாலே தந்தையும், மகனும் வேல் தூக்குறாங்க ; அண்ணாமலை அட்டாக்..!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 6:42 pm

2024 மற்றும் 2026 தேர்தலை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்ற கருத்திற்கு, பின்வாங்காமல் இருப்பது நல்லது.

அப்பொழுதுதான், ஒரு மாற்றம் வரும். சனாதனத்தை வேர் அறுக்க வேண்டும் என்றால், தமிழக அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை மாற்றுவாரா என கேள்வி?அப்படியே மாற்றினாலும் மாற்றித்தான் பார்க்கட்டும்.

எதுவும் தெரியாமல் புரியாமல் படிப்பறிவு இல்லாமல், சொல் புத்தி, சுய புத்தி இல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு, நான் பேசியது சரி எனக் கூறும் நபரிடம் நான் என்ன சொல்வது. சனாதன தர்மம் என்பது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோவிலில் வந்து 30 பிரசுரங்களை படித்துள்ளார்.இதும் ஒரு வகையான சனாதான தர்மம் தான். சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949 முதல் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் ஓட்டிகொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களை அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்.

2022-ல் தான் ஒரு கிறிஸ்தவர் எனக் கூறியவருக்கு சனாதனம் தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. உதயநிதி கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தால் முதல் கண்டன குரலாக எனது குரல்தான் இருக்கும். சனாதன தர்மத்தையும் அப்படித்தான் இருக்கும். குடியரசு தலைவர் தேர்தலின்போது, பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவிற்கு ஓட்டு போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டு போட்ட இவர்கள் எப்படி சானாதனம் குறித்து பேச முடியும்.

ஒரே நாடு ஒரே தேர்தலை 1971இல் கலைஞர் கருணாநிதி ஆதரித்தார். கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவாக எழுதியிருப்பார். அப்பா புத்தகத்தையே ஸ்டாலின் படிப்பதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தினுடைய கட்டாயம். நிச்சயமாக நடந்தே தீரும்.

உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன். 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும். மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம். தேர்தல் வந்தாலே அப்பாவும், மகனும் வேல் தூக்குவார்கள். முட்டாள்களை எல்லாம் அமைச்சர்களாக வைத்துக் கொள்பவர்களை என்ன செய்வது, என அமைச்சர் சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

  • GV Prakash latest interview நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!