காவல்நிலையத்தில் தீக்குளித்த பாஜக நிர்வாகி.. இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியாது ; காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!!
Author: Babu Lakshmanan5 September 2023, 7:29 pm
பொய் வழக்கு போட்டு துன்புறுத்தியதால் பாஜக நிர்வாகி ஒருவர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணியைச் சேர்ந்த துணைத் தலைவர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து தமிழக பாஜக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு தரணி முருகேசன் அவர்கள் மற்றும் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் திரு சிவா அவர்கள், காவல்நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.