அமைச்சர் பொன்முடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு… 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி… பறிபோன அமைச்சர் பதவி..!!
Author: Babu Lakshmanan21 December 2023, 11:14 am
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், முறையான விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தானாக இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அமைச்சர் பொன்முடியை விடுலை செய்தது செல்லாது என்றும், அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளதாகவும், அவருக்கான தண்டனை விபரங்களை டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாகவும், அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி, அவரது விசாலாட்சி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விபரங்கள் வெளியாக உள்ளது.
இதையொட்டி, தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்தார். தீர்ப்பு வழங்கப்பட உள்ள அறை எண் 46ல் இருவரும் காத்திருக்கின்றனர். அவருடன் மகன் கவுதம் சிகாமணி மட்டும் உடனிருக்கிறார். அமைச்சருக்கு எதிரான வழக்கில் இன்று தண்டனை விபரம் வெளியிட இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தண்டனை வழங்கும் போது, பொன்முடியின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், ஆகவே குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
தொடர்ந்து, பரபரப்பான சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனையுடன் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும், கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இது திமுகவுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திமுகவினரை மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.