கொட்டும் மழையிலும் CM ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி… தார்பாய்கள் போர்த்தியவாறு நிற்கும் பயனாளிகள்..!!
Author: Babu Lakshmanan11 November 2022, 10:07 am
கரூர் ; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட நிகழ்ச்சியில், கொட்டும் மழையில் தார்பாய்கள் போர்த்தியவாறு பயனாளிகள் நிற்கும் காட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோயில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சிக்காக நேற்றே கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தார்.
இன்று காலை நிகழ்ச்சி நடைபெறும் நிலையில். தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயனாளிகள் பலரும் விழா நடைபெறும் இடத்திற்கு வர காலதாமதமானது. இந்நிலையில், விழா அரங்கிற்கு முன்னர் தாரை, தப்பட்டை இசைக்கும் கலைஞர்கள் நனைந்தபடியே தங்களது இசையை இசைத்தனர்.
விழா அரங்கு ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட்டுகள் போடப்பட்டிருந்தாலும், விழா கூட்ட அரங்கு ஒட்டிய பகுதிகளில் மழைநீர் சேறும் சகதியுமானது.
இந்நிலையில், மின்சாரவாரிய உயரதிகாரி ஒருவர் மழைக்கு வெளியே சென்று செல்பேசியில் பேச, அவர் மழையில் நினையாதவாறு குடைபிடித்த ஊழியர் அவர் சென்ற இடமெல்லாம் அவரும் செல்ல, விழாவினையொட்டி பயனாளிகள் தார்பாய்கள் போர்த்தியவாறு நிற்க, அதை கரூர் கலெக்டர் பிரபுசங்கர் கண்டும் காணாதவாறு சென்றபடி விழா மேடை அடைந்த காட்சிகளும் மிகவும் வித்யாசமாக இருந்தது.