ரயிலில் தள்ளிவிட்டு மகள் கொலை செய்ததை கேட்டு தந்தைக்கு நேர்ந்த சோகம்… தப்பியோடிய காதலனை கைது செய்த தனிப்படை போலீசார்..!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 9:12 am

சென்னை : ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவியான சத்யாவுடன் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் தண்டவாளத்தில் விழுந்த சத்யா, தலை துண்டாகி உயிரிழந்தார்.

இதையறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காதலியை கொலை செய்த சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை பிடிக்க ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படைகளும், காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைத்து தேடப்பட்டது.

இதனிடையே, கொல்லப்பட்ட மாணவி சத்யா, ஆதம்பாக்கம் காவல்நிலைய தலைமை காவலர் ராமலட்சுமியின் மகள் என தெரிய வந்துள்ளது. அதேபோல, கொலை செய்த சதீஷ் ஓய்வுபெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு மனமுடைந்து போன அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஏற்கனவே, மகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த காதலன் சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!