காங்., தலைவர் தேர்தலில் களமிறக்கப்படும் 3வது வேட்பாளர்.. நள்ளிரவில் ஜி23 தலைவர் திடீர் ஆலோசனை… திக்விஜயசிங் – சசிதரூர் அப்செட்..!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 9:11 am

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான திக்விஜயசிங் – சசிதரூர் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், நள்ளிரவில் ஜி23 தலைவர் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் வரும் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தத் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி பதவியை ஏற்க மறுத்ததால், அந்தப் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதேவேளையில், ராஜஸ்தான் முதலமைச்சராக சச்சின் பைலட்டை நியமிக்க சோனியா காந்தி திட்டமிட்டார்.

ஆனால், சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு அசோக் கெலாட் அதிருப்தியடைந்தார். எனவே, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

இதனால், அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக நியமிக்க சோனியா முடிவு செய்தார். திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதனிடையே, திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக திக்விஜய் சிங் அறிவித்துள்ளார். இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள சசி தரூர் இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜி23 குழுவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை எனத் தெரிகிறது. மற்றொரு வேட்பாளராக களம் காண உள்ள திக்விஜய சிங் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்களான அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி உள்ளிட்டோர் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தினர்.

அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். இதனிடையே, யார் யாரெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார்கள் என்பது தெரிந்த பின், சிறந்த வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு இருக்கும் என்று ஜி23 தலைவர்களில் ஒருவரான பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சசிதரூர், திக்விஜய சிங் ஆகியோருக்கு ஆதரவு அளிக்க சக ஜி23 தலைவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவே, 3வது சிறந்த வேட்பாளர் யாரேனும் களமிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!