வங்க தேசத்தில் நீடிக்கும் வன்முறை… போராட்டக்காரர்கள் கண்டதும் சுட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 ஜூலை 2024, 2:03 மணி
bangla
Quick Share

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைக்கப்பட்டது. தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பினர்.

வன்முறை கட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் இருந்து சுமார் 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவர்கள் நேபாளம், பூடான் வழியாக இந்தியா திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  • Pawan ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!
  • Views: - 131

    0

    0