கடலூரை உலுக்கிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கொலை சம்பவம் ; 11 பேர் கைது… தப்பியோட முயன்ற போது தட்டி தூக்கிய போலீஸ்!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 9:59 am

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் ஆகியோருக்கு இடையே ஊராட்சி தேர்தல் போட்டியிடுவதில் பிரச்சனை நிலவி வந்தது. கடந்த 2020ம் ஆண்டு மதிவாணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அண்மையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி கும்பிட்ட மதிவாணன், தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பைக்கில் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மதியழகனை வழிமறித்தனர்.

உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய மதியழகனை, துரத்திச் சென்ற அந்த கும்பல், அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். இதில், மதியழகன் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதோடு, தலையில் அரிவாளை சொருகி வைத்து விட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது.

பட்டப்பகலில் காலை நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்தக் கொலை சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து கடலூரில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது, மதியழகனை கொலை செய்து விட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற, விஜய், அர்ஜுனன், முகிலன், குருநாதன், மணிகண்டன் உள்ளிட்ட 11 பேரை தனிப்படை போலீசார் கடலூர் – விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து, அவர்களை கடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!