தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கழுத்தறுத்து கொலை… 12 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 கொலை… குலை நடுங்கும் திண்டுக்கல்…!!

Author: Babu Lakshmanan
4 June 2022, 11:35 am

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மூன்று இடங்களில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் முருகபவனம் அருகே லோடுமேன் சிவக்குமார் என்பவரின் மகன் பிரபாகர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்து அறுத்து பிரபாகர்(20) என்ற இளைஞரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த கொலை குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

இதேபோல் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகே முன்விரோதம் காரணமாக சிவா என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றிய உடல்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சொத்து தகராறில் மகேந்திரன் என்ற விவசாயியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில், அதுவும் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவமானது அரங்கேறி குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவமானது அரங்கேறி காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. மூன்று இடங்களில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்த கொலைகளினால், கொலை மாவட்டமாக திண்டுக்கல் மாறி வருகிறதா..? என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!