திமுக ஆட்சியைக் கலைக்க முடியும் : சுப்பிரமணியசாமி போட்ட குண்டு!

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில்
தமிழக இந்து சமய அறநிலையத்துறை குறுக்கிடும் போதெல்லாம் அது பொதுவெளியில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்து விடுகிறது.

சிதம்பரம் கோவில் விவகாரம்!

இதற்கு முக்கிய காரணம் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரங்களில் அமைச்சர் சேகர் பாபு தேவையின்றி குறுக்கிடுவதாக கூறப்படுவதுதான்.

இப்படி ஏதாவது சிக்கலான நிலை ஏற்படும் போதெல்லாம் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியசாமி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சாதகமான தீர்ப்பை பெற்று தந்தவர் என்பதால் உரிமையோடு அதிரடியாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

குழந்தை திருமணம் சர்ச்சை

ஏற்கனவே நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக இந்து சமய அறநிலைத்துறை குற்றம் சாட்டியதும், அதற்கு பதில் அளிப்பது போல் தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அவர்களுக்கு சட்டவிரோதமாக இருவிரல் கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்ததால் எழுந்த சர்ச்சையும் இன்றளவும் ஓய்ந்த பாடில்லை.

இந்த நிலையில்தான் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி ஜுன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்களுக்கு கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது எனத் தீட்சிதர்கள் பதாகை வைத்துள்ளனர்.

கனகசபை விவகாரம்

ஆனால் இதை மீறி இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கனகசபை மீது ஏறி சாமி கும்பிட முயன்று இருக்கிறார். அப்போது தன்னை இரண்டு தீட்சிதர்கள் தள்ளி விட்டதாக சிதம்பரம் காவல் நிலையத்தில் அந்த பக்தர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன்
நடராஜர் கோவிலுக்கு சென்று தீட்சிதர்கள் வைத்த அந்தப் பதாகையை அகற்றியும் உள்ளனர்.

இப்பிரச்சனைதான் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது.

பின்வாங்க முடியாது என அமைச்சர் பேட்டி

இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “எவையெல்லாம் சட்ட விரோதமோ அவற்றையெல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர். சிதம்பரம் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கையில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டார்.

இதனால் தீட்சிதர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். தங்கள் மீது வேண்டுமென்றே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவிர அமைச்சர் சேகர்பாபுவும் எங்களை மிரட்டுவதுபோல் பேசுகிறார் என தீட்சிதர்கள் நினைத்தார்களோ, என்னவோ இந்த விவகாரத்தை தங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய சுப்பிரமணியசாமியின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்றும் விட்டனர்.

இதைக் கேள்விப்பட்டதும் அவர் கொதித்துப் போனார். கடந்த 26ம் தேதி காலை 11 மணி அளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டார்.

சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

அதில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படாத பட்சத்தில், அதை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யலாம். கோவில்களை கைப்பற்றுவதோடு, அதன் விவகாரங்களில் தலையிட்டு மிரட்டும் வகையில் பேசும் திமுக அமைச்சர்களின் செயலை வைத்தே திமுக ஆட்சியை கலைக்கலாம்” என்று அதிரடி காட்டி இருந்தார்.

ஆனால் சுப்பிரமணியசாமியின் எச்சரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட இரண்டு தீட்சிதர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையும் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த சுப்ரமணியசாமி அடுத்த சில மணி நேரங்களில் இன்னொரு பதிவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பின்விளைவு நேரிடும்

காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடும் விதமாக இருந்த அந்த பதிவில், “தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தீட்சிதர்களை டிஎஸ்பி அளவிலான காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்துவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் தமிழக அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளேன், இந்த அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ளாவிட்டால், அவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்த இரண்டு பதிவுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே திமுக அரசு கலைக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என அதிமுக, பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசி வருகின்றனர். அதனால் சுப்பிரமணியசாமி இதை நிறைவேற்றி விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகி விட்டது.

ஆட்சி கலைப்பு மிரட்டல்

“திமுக அரசுக்கு சுப்பிரமணியசாமி இப்படி ஆட்சி கலைப்பு மிரட்டல் விடுப்பது இது முதல் முறை அல்ல” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“ஏற்கனவே கடந்த ஆண்டு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கு அமெரிக்காவில் ஆயுதம் வாங்கி விநியோகம் செய்த தமிழக முக்கிய பிரமுகர் ஒருவரை அமெரிக்க உளவுத்துறை தேடி வருகிறது. ஆனால் அந்த முக்கிய புள்ளியோ திமுக ஆட்சியில் சுதந்திரமாக உலா வருகிறார். இதை காரணமாக வைத்தே திமுக ஆட்சியை கலைக்க முடியும் என்று அப்போது கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்தப் பிரமுகர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் சுப்பிரமணியசாமி திமுக ஆட்சி கலைப்பு பற்றி பேசினால் திமுக தலைமை அதற்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. அவரைக் கண்டாலே எட்டி ஓடும் நிலைதான் உள்ளது.

திமுக அமைச்சர்கள் அதிர்ச்சி

இதற்குக் காரணம் 1990-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமிதான் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. இப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை காரணமாக திமுக அமைச்சர்கள் பேசுவதை வைத்தே ஆட்சியை கலைத்து விட முடியும் என்று கூறுகிறார்.

இதனால் அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது நிச்சயம்.

சாதித்து காட்டிய சு.சாமி

இந்த நிலையில்தான் சுப்பிரமணியசாமி இரண்டாவதாக வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்றுக்கொண்டு அண்மையில் ஏற்பட்ட தீட்சிதர் பிரச்சனைக்கு சுமுக தீர்வு கண்டுள்ளது. இதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் நினைத்ததை சுப்பிரமணியசாமி சாதித்து விட்டார் என்பதுதான் உண்மை.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பிரச்சனை திருமாவளவன் எம்பி ஆக உள்ள சிதம்பரம் தொகுதியில் நடந்து இருக்கிறது. ஆனால் அவர் இதை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

9 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

10 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

11 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

11 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

12 hours ago

This website uses cookies.