சைக்கிளில் பள்ளி சென்ற சிறுமி: வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்த கஞ்சா போதை ஆசாமி: சென்னையில் பரபரப்பு..!!
Author: Sudha8 August 2024, 3:53 pm
சென்னை வியாசர்பாடி முல்லை நகர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அதிமுக பகுதிச் செயலாளர் அவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமி பள்ளி செல்வதற்காக முல்லை நகர் இடுகாடு வழியே சென்று கொண்டிருந்தார்.
அங்கே கஞ்சா போதையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியை சைகை காட்டி வழிமறித்து தகாத வார்த்தை பேசி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமி கத்திக் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கஞ்சா போதை நபருக்கு தர்ம அடி கொடுத்து மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் சுந்தர் எனவும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.